Friday, June 10, 2011

ஆடுகளம் – திரை விமர்சனம்


தனது முதல் படமான பொல்லாதவனில் வடசென்னை தாதாக்களின் இருட்டு உலகத்தை கீழ்த்தட்டு நடுத்தர வர்க்கத்து இளைஞனின் வாழ்வின் பின்னணியில் அழுத்தமாகச் சொன்ன வெற்றி மாறன் இந்த முறை வேறொரு களத்தில் இறங்கி ஆடியிருக்கிறார். மதுரையில் சேவல் சண்டையில் ஈடுபடும் குழுக்களைப் பின்னணியாகக் கொண்டு மனிதர்களுக்குள் செயல்படும் மிருகத்தனங்களைக் காட்டியிருக்கிறார். அதைப் போலவே இதிலும் தொட்டுக் கொள்ள காதல் இருப்பது கூடுதல் சிறப்பு!
களம் புதிது, காட்சி புதிது என்று தயங்காமல் சொல்லிவிடலாம். சேவல் சண்டையின் தன்மைகளை நுட்பமாகவும் துல்லியமான விவரங்களுடனும் ஆவணப்படுத்துகிறார் வெற்றி மாறன். சேவல்களை வைத்துக்கொண்டு நடக்கும் மனித ஆட்டங்களை சுவாரஸ்யமாகச் சொல்லிச்செல்கிறார். சேவல் சண்டையில் அந்த ஏரியாவிலேயே கொடிகட்டிப் பறக்கும் பேட்டைக்காரன் (ஈழக் கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலன்) என்ற பெரியவரின் குழுவிடம் தொடர்ந்து தோற்றுவருகிறது போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்தினத்தின் குழு. ரத்தினத்தின் அப்பா சேவல் சண்டையில் பெரிய ஆளாய் இருந்தவர். கறுப்பு (தனுஷ்) பேட்டைக்காரன் குரூப்பில் உள்ள விசுவாசமான சிஷ்யன்.
கறுப்பு தன் குருவிடம் கற்றுக்கொண்டதை வைத்து, ஒரு சேவலைத் தனியாக வளர்த்து வருகிறான். ஆனாலும் பேட்டைக்காரன் அது பந்தயத்தில் ஜெயிக்காது என்று கணிக்கிறார். ரத்தினத்திற்கும் பேட்டைக்காரனுக்கும் நடக்கும் ஃபைனல் சேவல் சண்டையில் கறுப்பு குருவை மீறி தன் சேவலைக் களமிறக்கி ரத்தினத்தைத் தோற்கடித்து பேட்டைக்காரரின் மானத்தைக் காப்பாற்றுகிறான். இதனால் பேட்டைக்காரனின் ஈகோ சீண்டப்படுகிறது. வெற்றியால் கறுப்புவின் வசதியும் புகழும் அதிகரிக்க, பேட்டைக்காரன் உள்ளுக்குள் புழுங்குகிறார். அந்தப் புழுக்கம் அவரை எதை நோக்கி நகர்த்துகிறது… எதிரியைக்கூட நேருக்கு நேர் எதிர்கொள்ளும் பேட்டைக்காரன் தன் சிஷ்யனை எப்படி எதிர்கொள்கிறார் என்பதில் மனிதர்களின் குணம் துல்லியமாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தக் கதைக்கு நடுவே ஆங்கிலோ இந்தியப் பெண் ஐரின் (டாப்ஸி) மீது தனுஷ் கொள்ளும் காதலும் அது மெல்லக் கனியும் விதமும் சொல்லப்படுகின்றன.
இந்தத் திரைக்கதையின் சுவாரஸ்யமே சேவல் சண்டைதான். சண்டைச் சேவலுக்கு தீனிவைப்பது, அதை களத்தில் இறக்குவது, சேவலை விற்க மனம் வராமல் தவிப்பது, சேவலைக் கொல்லச் சொல்லியும் கொல்லாமல் வளர்த்து அதையே பந்தயத்தில் விட்டு மானத்தைக் காப்பது என்று எல்லா கதாபாத்திரங்களையும் சேவலோடு ஒப்பிட்டுப் புரிந்துகொள்ள வைத்திருப்பதுதான்!
பேட்டைக்காரனுக்கு சோறு போடும் சேவல்களைப் போலவே இருக்கிறார்கள் அவருடைய சிஷ்யர்களான துரையும் கறுப்பும்! (கிஷோரும் தனுஷும்). காதல் கிறக்கத்தில் தனுஷ் தடுமாறுவதைப் போலவே அவர் வளர்க்கும் சேவலும் பந்தயத்தில் தடுமாறுகிறது. அந்த சேவலை நிராகரிப்பது போலவே தனுஷையும் நிராகரிக்கிறார் பேட்டைக்காரன். அது வெற்றி பெற்றால்கூட அது திறமையால் அல்ல அதிர்ஷ்டத்தால் என்று தொடர்ந்து சொல்லி தனுஷையும் சேர்த்தே அவமானப்படுத்துகிறார். கிஷோரும் தனுஷும் மோதும்போதுகூட நமக்கு சேவல் சண்டைதான் நினைவுக்கு வருகிறது. அதைத்தான் வெற்றிமாறனின் எழுத்துக்குக் கிடைத்த வெற்றியாகச் சொல்ல வேண்டும்.
படத்தின் முதல் பாதியின் விறுவிறுப்புக்கு தீனியாக இருப்பது பெரும்பகுதியை ஆக்ரமித்துக் கொள்ளும் சேவல் சண்டைதான். ஆரம்பத்தில் டாகுமெண்டரி போலத் தொடங்கினாலும் அதன் நுட்பங்களில் உள்ள சுவாரஸ்யம் நெளியாமல் உட்கார வைக்கிறது. சேவல் சண்டையில் மனித வாழ்க்கையின் அசைவும் இரண்டறக் கலந்திருப்பதால் அலுப்பில்லாமல் பார்க்க முடிகிறது. இடைவேளைக்கு முன்பு பதினைந்து நிமிடம் (கிராஃபிக்ஸ்) சேவல் சண்டையைக் காட்டி அசத்துகிறார் வெற்றி மாறன். எல்லோரும் தனுஷைத் தூக்கிக் கொண்டாட, இங்கே பேட்டைக்காரன் தனியாளாக அந்த சேவல் களத்தில் நிற்கும் இடைவேளைக் காட்சி இரண்டாம் பாதி எந்தத் திசையில் செல்லப் போகிறது என்பதைக் காட்டிவிடுகிறது.
களத்தை நிறுவுவதற்கு மிகவும் மெனக்கெடும் மாறன், மனித இயல்பு சார்ந்த அம்சங்களையும் நம்பகத்தன்மையோடு சித்தரிப்பதில் வெற்றி பெறுகிறார். பேட்டைக்காரர், கறுப்பு உள்ளிட்ட அவரது குழுவினர், கறுப்புவின் அம்மா, பேட்டைக்காரரின் மனைவி என்று பாத்திரங்களைக் கச்சிதமாக வார்த்திருக்கிறார். களச் சித்தரிப்பும், சம்பவங்களின் சுவாரஸ்யமும் ஜெயபாலன், தனுஷ், கிஷோர் ஆகியோரின் நடிப்பும் ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசையும் புதுமலர் போன்ற டாப்ஸியின் பொலிவும் படத்தோடு நம்மை ஒன்றச் செய்கின்றன.
தனுஷுக்கு இது மிக முக்கியமான படம். ஒட்டடக் குச்சி போல இருக்கும் அந்த உடம்புக்குள் இருக்கும் வேகம் பிரமிக்க வைக்கிறது. அண்ணனின் வார்த்தைகளை மீறி சேவல் சண்டையில் தன் சேவலை இறக்குவதில் தெரிவது அவருடைய விடலைத் தனம்தான். எதையும் விளையாட்டாக எடுத்துக் கொள்ளும் சிறுபிள்ளைத்தனம்தான். அதனால்தான், அண்ணே… நீ இப்படி நினைப்பேனு தெரிஞ்சிருந்தா நான் அந்தச் சேவலை களத்தில் இறக்கியிருக்க மாட்டேனே என்று சொல்லும்போது நம்பும்படியாக இருக்கிறது.
மதுரை வட்டார வழக்குப் பேச்சிலும் குருவிடம் காட்டும் விசுவாசத்திலும் சேவல் சண்டைக் களத்தில் தெனாவட்டாகத் திரிவதிலும் அம்மாவிடம் எகிறும்போதும் அவரை நினைத்து உருகும்போதும் தனுஷ் நம்பிக்கையான நாளைய நாயகனாகத் தெரிகிறார். தேவதை போன்ற பெண்ணைப் பார்த்துக் கிறங்குவது அவருடைய டிரேட்மார்க் ரகளை!
படத்தின் ரத்த ஓட்டம் தனுஷ் என்றால் அதன் இதயமாக ஜெயபாலனைச் சொல்லலாம். பழுத்த நடிகரைப் போன்ற திறனுடன் பாத்திரத்தைக் கையாள்கிறார். அந்த மீசைக்குள் நெளியும் உதடுகளும் ரோஷத்தில் துடிக்கும் கண்களும் அட்டகாசம். கோபம், பொறாமை என்று எல்லாவற்றுக்கும் ஈடு கொடுக்கிறது அவர் நடிப்பு.
தலை நிறைய முடியுடன் ஹீரோவின் நண்பனாக கிஷோர்… நடை உடை பாவனைகளில் நிஜமான நண்பனாக இருக்கிறார். எந்த நேரத்திலும் வில்லனாகிவிடுவாரோ என்று நாம் நினைத்துக் கொண்டே பார்ப்பதால் வில்லனாகவும் தெரிகிறார்.
இதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய விஷயம் ஜெயபாலனுக்கும் கிஷோருக்கும் குரல் கொடுத்திருக்கும் ராதா ரவியும் சமுத்திரக்கனியும்! குரலுக்கும் ஒரு கேரக்டர் உண்டு என்பதைக் காட்டியிருக்கிறார்கள் இருவரும்.
இவர்களைப் போலவே தனுஷின் தாயாக வருபவர், தனுஷின் கூடவே வரும் நண்பர், பேட்டைக்காரனின் மனைவி மீனாள், பேட்டைக்காரனுக்கு எதிராக உறுமிக் கொண்டே திரியும் இன்ஸ்பெக்டர் ரத்தினம் என எல்லோருமே படத்துக்கு பலம் சேர்க்கிறார்கள்.
வெற்றிமாறனுக்கு இடதும் வலதுமாக நின்று தோள் கொடுத்திருப்பவர்கள் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷும், ஒளிப்பதிவாளர் வேல்முருகனும். பிரகாஷின் இசையில் ‘யாத்தே’பாடல் பண்பலைகளின் தேசிய கீதமாக மாறிவிடும். ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் காட்சிகளின் காலப் பின்னணியைக் கச்சிதமாகப் புலப்படுத்தியுள்ளார். இரவுக் காட்சிகள் அற்புதமாகப் படமாக்கப்பட்டிருக்கின்றன.
பெரியவரின் இமேஜுக்குப் பாதிப்பு வரக் கூடாது என்ற நோக்கத்துடன் கொலைப் பழியைச் சுமந்துகொண்டு கறுப்பு கிளம்பிச் செல்லும் கிளைமாக்ஸ் கனமாக உள்ளது. சேவல் சண்டையில் கிராஃபிக்ஸ் (விலங்கு வதைத் தடுப்புச் சட்டம் நிஜ சேவல்களைப் பயன்படுத்த அனுமதிக்கவில்லை) கொஞ்சம் பல்லிளித்தாலும் அந்தச் சண்டை காட்சிப்படுத்தப்பட்டுள்ள விதம் அருமை. ஹீரோவின் சேவல்தான் ஜெயிக்கும் என்பது தெரிந்ததுதான் என்றாலும் அதைக் காட்டும் விதத்தில் வெற்றிமாறன் அப்ளாஸை அள்ளுகிறார். வசனங்களில் கூர்மையும் இயல்பும் இருக்கின்றன. மதுரைக்கே உரித்தான லொள்ளுகளும் ரசிக்கும் விதத்தில் படமாக்கப்பட்டுள்ளன.
படத்தில் மைனஸே இல்லையா என்று கேட்கலாம். முதல் மைனஸாகத் தோன்றுவது தேவதை போலத் தோற்றம் அளிக்கும் நாயகி டாப்ஸி. மிகக் குறைவான முகபாவனைகளோடு வந்துபோகிறார். தமிழ் கதாநாயகிக்கு இதுபோதுமென்றாலும் பக்கத்தில் இருப்பவர்கள் பதினைந்து மைல் வேகத்தில் செல்லும்போது இவருடைய ஸ்லோ சைக்கிள் பின்னுக்கு இழுக்கிறது.
அதேபோல முதல் பாதியில் சேவல் சண்டையின் நுட்பங்களைச் சொல்ல அதிகக் காட்சிகளை எடுத்துக்கொண்டிருக்கிறாரோ என்று தோன்றுகிறது. அதனாலேயே மனிதர்களின் குணங்களைச் சொல்ல போதிய அவகாசம் இல்லாமல் போய்விட்டது. இரண்டாம் பாதியில் பேட்டைக்காரனின் மன மாச்சரியங்கள் எந்தத் திசையில் போகும் என்பது தெரிந்த பிறகு படம் நீண்டுகொண்டு செல்வது இழுவையாக இருக்கிறது. அந்த மனமாற்றத்தையும் தனுஷ் மிகத் தாமதமாகத் தெரிந்துகொள்வது நம்பும்படி இல்லை.
சேவல்களையும் தன் சிஷ்யர்களையும் அத்தனை நேசிக்கும் ஒரு மனிதர் தன் மனைவியை சந்தேகிக்கிறார் என்பது அவரை வில்லனாகக் காட்டுவதற்காக திணிக்கப்பட்டதாகவே இருக்கிறது. பின்னணியை விளக்குவதிலும் குழுவினருக்குள் நடைபெறும் சண்டைகளிலும் தேவைக்கு மேற்பட்ட நீளம் இருப்பது படத்தின் முக்கியமான இன்னொரு குறை.
இவைகளை தவிர்த்தால் ஆடுகள்ம் ஒரு வெற்றி களம் தான்!

No comments:

Post a Comment