Showing posts with label சாரணீயம். Show all posts
Showing posts with label சாரணீயம். Show all posts

Sunday, June 19, 2011

முன்னோடிப்பயிற்சி

சாரணர் சம்மந்தப்பட்ட முன்னோடிப்பயிற்சி பருத்தித்துறை மாவட்டத்தினால் 
18 -19.06.2011   ஆகிய தினங்களில் யா/ தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயத்தில் மாவட்ட சாரண ஆணையாளர் திரு .மு.இரவீந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இப் பயிற்சியானது வருடத்தில் ஒருமுறை நடைபெறும் . இவ்வருடம் இப் பயிற்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இவ்வருடம் இப் பயிற்சியில் ஆண் சாரணர்களும் பெண் சாரணர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும். இப் பயிற்சியில் மொத்தமாக 85 சாரண மாணவர்கள் கந்துகொண்டனர். மேலும் இப்  பயிற்சிக்கு வளவாளர்களாக திரு ந.மகேந்திரராஜா அவர்களும் திரு பொ.ரஞ்சனதேவர் அவர்களும் திரு செ.ரவிக்குமார் அவர்களும் திரு கோ. செல்வவிநாயகம் அவர்களும் கலந்துகொண்டு பயிற்சி சிறப்புற வழி சமைத்தனர். மேலும் யா/ தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலய அதிபர் திரு இரா.ஸ்ரீ நடராஜா அவர்கள் பலவகையிலும் உதவிகள் புரிந்தார்.





பயிற்சியில் சாரண மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கையேட்டு நிழற்படங்களை இந்த இணையத்தளத்தில் பிரசுரிப்பதற்கு அனுமதியினை தந்துதவிய மாவட்ட சாரண ஆணையாளர் திரு .மு.இரவீந்திரன் அவர்களுக்கும், திரு கு.கி.சிவகடாட்சம் செந்தூரன் அவர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்கின்றோம் 































 நிழற்படங்கள் -  திரு கு.கி.சிவகடாட்சம் செந்தூரன் (K.K.S.S)






Saturday, June 11, 2011

சமூகப் பணியின் அடையாளம் சாரணியம்




வகுப்பறைக் கற்றல் கற்பித்தல் நுட்பங்களில் பல்வேறு மாற்றங்களையும், நவீன சிந்தனையுடனான புதுமைகளையும் செய்து மாணவர்களின் உள்ளங்களில் பதிவை ஏற்படுத்த வேண்டும் இதைத்தான் தற்கால கல்வி செயற்திட்டம் தேர்ச்சி அடிப்படையிலானதும், செயற்பாடுகளினூடாகவும் சூழலுடன் இடையறாது தொடர்புபடுத்தி மாணவர்களிடம் மகிழ்ச்சியையும், விருப்பையும் தாரளமாக அனுபவித்து அதன் மூலம் வெற்றியை நோக்கியதாக பிள்ளையின் ஆற்றலை உருவாக்குவதே இன்றைய கல்வி நடைமுறைகள்.
அந்த வகையில் பாடத்திட்டத்துடன் இணைந்ததாக பல்வேறு ஆக்கபூர்வ செயற்பாடுகளையும், மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகளையும் இணைத்து கற்றலை சிறப்பாக உருவகிக்க முடியும். இதனால்தான் இன்றைய நவீன கற்றலிலும் மாணவர் அடைவை மெருகூட்டி இன்னும் இன்னும் அதனை வளர்த்துச் செல்வதற்கு உகந்த பலவிதமான செயற்பாடுகளின் ஓர் அம்சமாகவே சாரணியச் செயற்பாடுகள் பாடசாலை, மட்டத்தில் மட்டுமன்றி குருளைச் சாரணர் என்றும், வளர்ந்தோர் (திரி) சாரணர் என்றும், பெண் சாரணர், கடல் சாரணயம் என்றும் பலவிதமான பெயர்களுடன் சமூகத்தின் அனைத்து தரப்பாரிடமும் இன்று சாரண செயற்பாடுகள் மிகவும் உயர்ந்த மட்டத்தில் இருப்பதற்கு காரணம் அதனது அடிப்படையான சாரணியத் தத்துவங்கள் உதவியாக அமைந்திருப்பதேயாகும். ஆதலால்தான் கல்விப் புலத்தார் மட்டுமன்றி அனைத்துத் தரத்தாரையும் கவர்ந்திழுத்து நாட்டின் ஜனாதிபதி முதற்கொண்டு சாதாரண பாமரன் வரை இணைத்துள்ளது.

மனச்சாந்தி சமத்துவம், நம்பிக்கை, மரியாதை, நேசம் போன்ற சாரண விதிகளின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்டு மனித கெளரவத்தின் மீது வாக்குறுதி அளிக்கின்ற ஓர் உலகளாவிய அமைப்பே இச்சாரணிய அமைப்பு.
நாட்டுப் பற்றுமிக்கவர்களை உருவாக்குவதற்காக பலகோடி ரூபாய்களை செலவு செய்தும் கிடைக்காத ஒரு விடயத்தை ஒரு சிறு வார்த்தையில் லண்டனில் பிறந்த பேடன் பவல் இந்த சாரண உருவாக்கம் பல கோடி மக்களின் மனங்களில் சுடர்விட்டெரிய காரணமாக இருந்திருக்கிறார். அவர் இட்டுச் சென்ற பாதையானது மிகவும் சாந்தமானது, மனிதனை புனிதனாக்குகிறது என்றுதான் சொல்லவேண்டும். எனவேதான் ‘நாட்டுப் பற்றுமிக்கதும், சதாகாலமும் பிறருக்கு உதவுகின்றதுமான’ தாரக மந்திரத்தை உலகுக்கு எடுத்துக் காட்டியவர்தான் சாரணியத்தின் தந்தை எனப் போற்றப்படுகின்ற பெரியார் ‘றொபட் ஸ்டீவன்சன் ஸ்மித் பேடன் பவல் பிரவு’ மனித சமூகத்தின் மேம்பாட்டிற்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்த இவர் பிறந்தது 1857 பெப்ரவரி 22ஆம் திகதியாகும். அதனைத்தான் ‘பேடன் பவல் தினம்’ அல்லது ‘ஸ்தாபகர் தினம்’ என்று இன்று இத்தினத்தை சாரணிய உலகம் அழைக்கிறது.
இவர் இங்கிலாந்தில் பிறந்து தனது 19ஆம் வயதில் இராணுவச் சிப்பாயாக பயிற்சி பெற்றதன் பின்னர் வீரதீரமிக்க உப லெப்டினனாக இந்தியா மற்றும் ஆபிரிக்கா நாடுகளுக்கு சென்ற வேளைகளில் அங்கு கண்ணுற்ற பல்வேறு மனித இம்சைகளையும், அமைதியற்ற நிலையில், வாழ்வின் விளிம்பில் ஏங்கித் தவித்துக் கொண்டிருந்த மனிதர்களின் அவலங்களையும் கண்டு மிகவும் மனம் நொந்து இதற்கான வழியைத் தேடுவதற்கு தன்னை தயார்படுத்தினார்.

அதன் பின்னர் மீண்டும் இங்கிலாந்து சென்று இதற்குரித்தான விடிவினைக் காணும் நோக்குடன் இராணுவத்திலிருந்தே விலகி விடையும் கண்டார். அதுதான் ‘சாரணியத்துறை’ பற்றிய நூலினை எழுதி வெளியிட்டு சாரணியத்தின் நல்ல பல கருத்துக்களையும் இதன்மூலம் முன்வைத்து உலகிற்கே அறைகூவல் விடுத்தார். அதன் பிற்பாடு, 1907 ஆம் ஆண்டில் பிறவுன்ஸி தீவில் 20 மாணவர்களுடன் சென்று அங்கிருந்து சிந்தித்ததன் வெளிப்பாடுதான் நாம் காணுகின்ற சாரணியத்தினது முதலாவது ஒன்று கூடலாக அன்று மலர்ந்திருந்தது.
தனிமையில் ஒருமனிதன், மதம் கலாசாரத்திற்கு அப்பால் ஒரு புதிய சமூகத்தையே வெளிக்கொணர வைத்ததற்கு தன்னலமற்ற தியாக உணர்வும், மனித கெளரவத்தினை மதிக்கின்ற பண்பினையும் கொண்டமைந்த விளைவுகளை சுமார் 160க்கும் மேற்பட்ட நாடுகள் இச்சாரணிய அமைப்பினுள் உள்வாங்கப்பட்டதன் காரணம் பேடம் பவலினது மனிதனை மனிதனாக மதிக்கின்ற சாரணியத்தினது தோற்றுவாய் மிகவும் மனிதநேயமுடையதாய் காணப்பட்டது என்பதே.
ஒரு சாரணன் தனது வாக்குறுதியினை எடுக்கின்ற முறையோ மிக வித்தியாசமான முறையாக கொள்ளப்படுகிறது. இவற்றின் பிரகாரம் தனது கட்டை விரலையும் சுண்டு விரலையும் மடித்து மற்ற மூன்று விரல்களையும் விரித்து (நேராக நிமிர்த்தி ஒட்டியவாறு) சாரண வாக்குறுதி பெறல் வேண்டும். ‘என்னால் கூடுமானவரை என் சமயத்திற்கும், நாட்டிற்கும், என் கடமைகளைச் செய்வேன் எனவும், எக்காலத்திலும் பிறருக்கு உதவிபுரியவும், சாரண விதிகளுக்கு அமைவாகவும் பணிந்து நடப்பேன். என என் கெளரவத்தின் மீது சத்தியம் செய்கிறேன்’ என்று வாக்குறுதி பெறுவதன் ஊடாக சாரண இயக்கம் சமூகத்தின் அனைத்து தரப்பினரையும் சமூகத்தின் நலனே தனது நலன் எனக் கருதி தொண்டு செய்வதற்கு அர்ப்பணித்துள்ளது. சிறு வயது முதல் நற்கல்வியை கற்று சீரும் சிறப்புமிக்கதான ஒழுக்க விழுமியமுள்ள பண்பாளனாக, நேர்மையாளனாக பண்பும் பாசமும் கொண்டமைந்த முழுமையாக மனிதனை உருவாக்கும் கைங்கரியத்தினை இன்று சாரண இயக்கம் பாடசாலையிலிருந்தே வளர்த்து வந்துள்ளது.
நம்பத் தகுந்தவன், பற்றுறுதியாளன், நேசமும் மரியாதையும் கொண்டவன், மற்ற சாரணனுக்கு சகோதரன், வீரம் தெரிந்தவன், பிராணிகளின் தோழன், ஒத்துழைப்பவன், மகிழ்ச்சியுடையவன், சிக்கனமானவன், தனது எண்ணம், சொல், செயல் போன்றவைகளில் மிகவும் தூய்மையானவனாக காணப்படுபவனே சிறந்த சாரணன்’ எனவும் சாரண விதிகள் கூறுகின்ற அதேவேளை, இதன் வீரவசனங்களைக் கொண்டுதான் இவ்வியக்கம் உலகில் மதிக்கப்படுகின்ற மிகப்பெரியதோர் அமைப்பாக இன்று வளர்ச்சிபெற்றுள்ளமைக்கு இயக்கத் தோற்றுனர் ‘பேடன் பவல் பிரபு’ அவர்கள் தனது இளமைக் காலத்தில் உதைபந்து, நடிப்பாற்றல், சித்திரம், சங்கீதம் போன்ற துறைகளில் ஆர்வம் மிக்கவராகவும் காணப்பட்டமையும் ஒரு காரணமாக அமைந்திருந்ததேயாகும்.
‘பவல்’ தன்னுடைய 26வது வயதில் இராணுவத்தில் உயர் பதவியினைப் பெற்று ஆபிரிக்கா சென்ற வேளை இரு பிரிவினருக்கிடையில் ஏற்பட்ட சண்டையின்போது ஸ¤லு இனத் தலைவனைப் பிடிப்பதில் வெற்றி கண்டார். அதன்விளைவு மிகவும் பாராட்டுக்குரியவராக பேடன் பவல் பிரபு திகழ்ந்திருந்தார். இவ்வாறான நல்ல பல செயற்பாடுகளும் சாரண இயக்கத்தின் தோற்றுவாய்க்கு ஆதாரமாக அமைந்திருந்தன.
தனது முதலாவது இளைஞர் சாரணியத்தை 1908ம் ஆண்டிலும் 1909ம் ஆண்டில் முதலாவது சாரண விழாவையும் நடாத்தியதன் பின்னர் சாரணிய இயக்கத்தில் பல்வேறு சாரணர் பிரிவுகளையும் ஆரம்பித்தார். 1920 ம் ஆண்டில் ஒலிம்பியா நகரில் முதலாவது ஜம்போரியை வெற்றிகரமாக அரங்கேற்றினார். அதே ஆண்டில் லண்டன் மாநகரில் உலக சாரணர் சபையை நிறுவினார். பின்பு கனடாவின் ஒட்டாவா நகரிலும் நிறுவினார். அதன்பின்பாடு தற்போது ஜெனீவா நகரில் அமைந்துள்ள தனது தலைமைக் காரியாலயம் ஓர் உலக சாரணர் சபை (தீலிஷிகி) யாக விரிவடைந்து 5 கண்டங்களுக்குமான 5 பிரிவுகளையும் கொண்டுள்ளது.
1921ம்ஆண்டிலும் 1934ம் ஆண்டிலுமாக இரண்டு தடவைகள் இலங்கைக்கு வருகை தந்தார் பேடன் பவல். அவரது சிந்தனையின் வடிவமான சாரணர் இயக்கம் 1912ம் ஆண்டில் எமது நாட்டில் உருவாக்கம்பெற்று கொழும்பில் 1957ம் ஆண்டில் முதலாவது உலக ஜம்போரியும் நடைபெற்றது. சாரணியத்தின் தார்ப்பரியம் உணரப்பட்டதன் காரணமாக இதேயாண்டில் பாராளுமன்ற 13ஆம் இலக்கச் சட்டத்தின் பிரகாரம் சாரணர் சங்கம் ஒரு அங்கீகாரம் பெற்ற அமைப்பாகவும் நிறுவப்பட்டது.
‘சாரணியத்தினூடாக கல்வி’ என அமைந்துள்ள சாரணியத்தின் செயற்பாடுகள் இன, மத, மொழி, சாதி வேறுபாடுகளுக்கப்பால் நல்ல பல பண்புகளை இளம் வயதிலிருந்தே வளர்த்துக் கொள்ள சாரணர் பாசறைகளும், ஒன்றுகூடல்களும் வழிகாட்டுகின்றன. சிறப்பான கல்வியை பெறுகின்ற மாணவர்களாக மாற்றி வருகின்ற சக்திமிக்கதோர் அமைப்பாகவும் சாரணியம் அமைந்துள்ளது.

வெறும் புத்தகக் கல்வியினால் பயனேதுமில்லை. செயற்பாட்டுடனான தேர்ச்சிமையக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ள இன்றைய கல்விப் புலத்தில் சாரணியத்தின் வேரூன்றலானது முக்கியத்துவமிக்கதாய் உணரப்பட்டுள்ளமையினால் சாரணியத்தில் மாணவர்கள் பெறுகின்ற உயர் விருதான ஜனாதிபதி விருது கிடைக்கின்ற மாணவர்களின் உயர்கல்விக்கு பல்கலைக்கழக நுழைவுக்கு துணைபுரியவும் சாரணியம் உதவுகிறது.
இலங்கையின் ஜனாதிபதியை தலைவராக கொண்டமைந்துள்ள இலங்கை சாரணர் சங்கம் மாகாண மட்டத்தில் மாகாண சாரண ஆணையாளர்கள், மாவட்டங்கள் தோறும் மாவட்ட ஆணையாளர்கள், பயிற்சி மற்றும் நிர்வாக நடவடிக்கைகளுக்காக உதவி மாவட்ட ஆணையாளர்கள் ஆகியோர் நியமிக்கப்பட்டு நாடு முழுவதும் பாடசாலைகள் மட்டத்திலும் வெளியிலும் இன்று சாரணிய செயற்பாடுகள் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது.
இற்றைக்கு சுமார் 153 ஆண்டுகளுக்கு முன்னர் பிறந்த பேடன் பவல் பிரபு தனது அயராத முயற்சியின் பலாபலன் விருட்சமாக உயர்ந்து வளர்வதற்குக் காரணம் சாரணியத்தின் அனைத்து அம்சங்களிலும் மனிதாபிமானம் குடிகொண்டிருப்பதே ஆகும். 1941ல் மறைந்த பவலினது சமூகத்தொண்டினை அரங்கேற்றி சாரணியம் என்றும் வாழ ஸ்தாபகரை நினைவுகூருவோம். எதிர்வரும் 2013ஆம் ஆண்டுக்குள்ளாக ஒரு இலட்சம் சாரணர்களை நாடு பூராகவும் உருவாக்கும் செயற்திட்டத்தை முன்வைத்து தலைமைக் காரியாலயம் இயங்கிவருகின்றது.
புதுப்பொலிவு பெற்று வரு கின்ற இச்சாரணிய அமைப்பில் சரியான திட்டமிடல் நேரமுகாமை, கட்டளைக்கு கீழ்படிகின்ற தன்மை போன்ற அம்சங்கள் நிறைந்து காணப்படுகின்றதனால்தான் காலத்திற்கேற்றவாறும் வீறுநடை போடுகின்றது இச்சாரணர் இயக்கம்.

கில்வெல் பேடன் பவல் பிரபு


சாரணீயத்தைப் பற்றி அறியாதவர்கள் இல்லையென்று சொல்லுமளவிற்கு உலகமெங்கும் சாரணீயம் வியாபித்துள்ளது. 1907 ஆம் ஆண்டு சாரணர் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது.
பேடன் பவல் தமது சிறுவயதில் அவரது பசுமையான சந்தோசமான வாழ்க்கை அனுபவங்களில் இருந்து அவரால் ஆரம்பிக்கப்பட்ட இயக்கமே சாரணர் இயக்கம். ஆரம்ப காலத்தில் சாரணனின் பணி போர்க்காலத்தில் எதிரிகளின் படை, நிற்குமிடம் என்பனவற்றை துணிவுடன் அறிந்து  போர்க்களத்திற்கு சென்று தாம் அறிந்து வந்ததை  தம் நாட்டுப் படைகளுக்கு அறிவிப்பதாகவிருந்தது. இது காலப்போக்கில் படிப்படியாக தேசத்திற்கும், சமயத்திற்கும் பணி புரியும் இயக்கமாக மாறி வந்துள்ளது.
சாரணியத்தில் இணைந்து கொள்ளும் சாரணர்களிடையே அபிவிருத்தி என நோக்கும் போது, ஆரோக்கியத்தைப் பேணும் நற் பழக்கவழக்கங்களை ஏற்படுத்துவதுடன், அதன் குறிக்கோளாக கைத்திறன் விருத்தியுடன், பரந்துபட்ட அறிவுடன், தன்னம்பிக்கையையும் வளர்க்கின்றது.  மேலும் செயற்றிட்டங்களை நெறிப்படுத்தல், வெளிக்களங்களில் துணிவு சேர் செயற்பாடுகள் நாட்டின் பண்பாட்டையும், அபிவிருத்தி என்பனவற்றில் அக்கறை, ஒழுக்க நெறிகளில் முன்னுதாரணம், சமூகத்திற்குப் பயனுள்ள சேவை போன்ற நற்பண்புகளை வளர்த்தெடுக்கக் கூடிய வகையில் சாரணீயம் காலத்திற்கு ஏற்றவாறு நல்ல பல திட்டங்களை நடைமுறைப்படுத்தி வந்துள்ளது.
உலகப் பிரதம சாரணர் கில்வெல் பேடன் பவல் பிரபு அவர்களின் நூற்றைப்பதாவது பிறந்த தினத்தில்  சாரணீயம் ஆரம்பிக்கப்பட்டு நூற்றாண்டு விழா காணும் இவ்வுலக இயக்கமான  சாரணீயத்தைப் பற்றி நாம் முற்றும் முழுதாக அறிந்து கொள்ள வேண்டுமாயின் சாரணீய இயக்கத்தை ஆரம்பித்தவரது வாழ்க்கைப் பற்றி நாம் சிறிது தெரிந்திருப்பது அவசியமாகும்.
பேடன் பவல் பிரபு இங்கிலாந்தில் இலண்டன் நகரிலே 1857 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 22 ஆந் திகதி பிறந்தார். ஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்த சங்.எச்.ஜி. பேடன் பவல் அவர்களுக்கும், பிரித்தானிய கடற்படைத்தளபதி டபிள்யூ.ரீ.ஸ்மித் என்பவரின் மகளாகிய ஹென்றியேற்றா கிறேஸ் ஸ்மித் என்பவருக்கும் மகனாகப் பிறந்தார். இவருக்கு தாய் தந்தையர் இட்ட பெயர் இராபாட் ஸ்மித் பேடன் பவல் என்பதாகும்.

ஏழு சகோதரர்களை உள்ளடக்கிய குடும்பத்தில் கடைசிப் பிள்ளையாகப் பிறந்திருந்த பவலுக்கு மூன்று வயதாக இருக்கும் போதே தந்தையார் இறந்துவிட்டார். அப்போதே மூத்த புதல்வனுக்கு 14 வயதாகவும் இருந்தனால் தாயாருடைய பாதுகாப்பிலேயே வளர்ந்தார்கள். பெரிய குடும்பம், கஷ்டமாகக் காலத்தைக் கழிக்க வேண்டியிருந்த போதிலும் பிள்ளைகள் மீது தாயாரும்இ தாயார் மீது பிள்ளைகளும் கொண்டிருந்த அன்பினால் அக்கஷ்டங்களை மறந்து வாழ்ந்தார்கள்.
ஆரம்பகால வாழ்கை
இவரது சிறுவயது வாழ்க்கை மிகவும் சந்தோசமான காலமாகும். இங்கிலாந்தின் பல்வேறு பகுதிகளுக்கு தனது சகோதர்களுடன் பிரயாணங்களை செய்து, வெட்ட வெளிகளில் பாசறை அமைத்து இன்பமாக கழித்ததுடன், வள்ளங்களில் சுற்றி திரிதல், மலையேறுதல்,  முயல் வேட்டை என்பனவற்றிலும் அதித ஈடுபாடு கொண்டிருந்தார்.
1870 ஆம் ஆண்டில் இலண்டனிலிருந்த சாட்டர்கவுஸ் கல்லூரியில் உபகாரச் சம்பளம் பெற்று படிப்பதற்காக சென்ற இவர் கல்வியில் விற்பன்னராக இல்லாத போதிலும் அக்கல்லூரியின் உதைபந்தாட்டக் குழுவின் முக்கிய அங்கத்தவராக இருந்தார். அத்துடன் சிறந்த நடிப்புத்திறன் மிக்கவராகவும் சித்திரம் வரைதல், சங்கீதத்தில் பற்று இப்படியாக அனைத்துத் துறையிலும் சிறந்து விளங்கினார். இதனால் பாடசாலையிலுள்ள அனைவரது உள்ளங்களையும் தன்பால் ஈர்த்துக் கொண்டார்.
இந்தியாவில் பேடன் பவல்
19 வது வயதிலே சாட்டர்கவுஸ் கல்லூரியில் பட்டம் பெற்று, இராணுவத்தில் சேர்ந்து குதிரைப் படையின் உப தளபதியாக இந்தியா சென்று “கிரிமியன்” என்ற யுத்தத்தில் வெற்றியை ஈட்டிக் கொடுத்தார். திறமையான இராணுவச் சேவையினால் தனது 26 வது வயதிலே இராணுவத் தளபதியாகும் வாய்ப்பைப் பெற்றுக் கொண்டார்.
ஆபிரிக்காவில் பேடன் பவல்
1887 ம் ஆண்டில் ஆபிரிக்காவில் சூலு வம்சத்தினருக்கு எதிராகவும் கொடிய அசாந்தி இனத்திற்கெதிராகவும் பெரும் யுத்தங்களை நடாத்தினார். இவரது மிகத்திறமையான யுத்த நுட்பங்களை பாராட்டிய சுதேசிகள் இவரை “இம்பிசா” என்று அழைத்தனர். இதன் பொருள் “ஒரு போதும் துயில்கொள்ளாத ஒநாய்” என்பதாகும்.
தனது திறமையினால் படிப்படியாக பதவி உயர்வுகளைப் பெற்று 1899 ஆம் ஆண்டிலே உபதளகர்;த்தா (கேணல்) பதவிக்கு உயர்த்தப்பட்டார். அவ்வேளையில் தென்னாபிரிக்காவிலுள்ள மேப்கிங் நகரம் எதிரிகளால் முற்றுகையிடப்பட்ட போது தனது திறமையால் சிறுவர்களைப் பழக்கி ஒற்று அறிவதன் மூலம் தனது சிறிய படை உதவியுடன் தாய் நாட்டிலிருந்து உதவி கிடைக்கும் வரை 217 நாட்கள் நகரைப் பாதுகாத்து வெற்றி வீரராகத் திகழ்ந்தார். 1901 இல் மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்று பெருவீரனாக தாய் நாடு திரும்பினார்.
சாரணீயம் பிறந்தது
இவர் தனது அனுபவங்களைக் கொண்டு இராணுவ வீரர்களுக்காக “சாரணீயத்துக்காய துணை” என்னும் நூலை எழுதினார். இந்நூல் மக்களிடையே பெரும் செல்வாக்குப் பெற்றிருந்ததுடன் சிறுவர்களிடமும் ஆர்வத்தினை ஏற்படுத்த இது பாடசாலைகளில் சிறுவர்களுக்கான பாடப்புத்தகமாகவும் பயன்படுத்தப்;பட்டது.
வயது வந்தவர்களுக்காக எழுதப்பட்ட நூல் சிறுவர்களிடம் ஏற்படுத்திய ஆர்வத்ததைப் பற்றி சிந்திக்கலானார். சிறுவர்களை ஆரம்பத்திலிருந்தே ஆளுமையுடைய நற்பிரஜையாக உருவாக்க வேண்டிய தேவையை உணர்ந்து கொண்ட அவர் இந்தியாவிலும்; ஆபிரிக்காவிலும் தாம் அடைந்த அனுபவங்களை கொண்டு சாரணியக் கொள்கையை உருவாக்கினார். இம் முறை வெற்றியடையுமா என பரிசோதிக்க 1907 ஆண்டில் இங்கிலாந்திலுள்ள பிரவுன்ஸீத் தீவில் சாரணீய பாசறையை 20 சாரணர்களுடன் நடாத்திக் காட்டினார். இதுவே உலகம் கண்ட முதலாவது சாரணீய பாசறையாகும். இப்பாசறை பெரும் வெற்றியை அளித்ததோடு அனைத்துலக மக்களின் கவனத்தையும் ஈர்த்தது. இப் பாசறையில் இருந்து பெற்ற அனுபவங்களைக் கொண்டு 1908 ஆம் ஆண்டில் “இளைஞர் சாரணீயம்” என்ற நூலை 6 பிரசுரங்களாக வெளியிட்டார்.
அதன் பின்னராக 1909 ஆண்டில் கிறிஸ்ரல் பிளேஸ் ( Cristal Place ) எனும் இடத்தில் முதலாவது சாரணர் ஒன்று கூடல் ஒன்றினை வெற்றிகரமாக நடத்தினார். இதில் சாரணர் தொண்டர் படை என்ற அமைப்பை அறிமுகப்படுத்தினார்.  
இதன் பின்னர் குறுகிய காலத்தில் இயக்கத்தின் வளர்ச்சியைக் கண்ட பேடன் பவல் அவர்கள் வருங்கால சந்ததியினரை உத்தமர்களாக்குவதற்கு இதுவே சிறந்த வழி என்பதை உணர்ந்து கொண்டதுடன், இதுவே தமது வாழ்க்கையின் தொண்டாக அமையும் என்றும் நம்பினார். இதனால் 1910 ஆண்டில் இராணுவத்தில் தாம் வகித்த பெரும் பதவியைத் துறந்ததுடன் அவர் தமது இரண்டாவது வாழ்க்கை எனும் இம் முயற்சியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார்.
சாரணீயத்தை உலக சகோரத்துவ இயக்கமாக்குவதற்கு ஆரம்ப முயற்சியாக 1912 ஆண்டளவில் உலகத்தின் பல பாகங்களிலும் உள்ள சாரணர்களை சந்திப்பதற்காக பிரயாணங்களை மேற் கொண்டிருந்ததுடன், பல்வேறு நாடுகளிலும் சாரணர்களுடன் செய்தி தொடர்புகளையும் வைத்திருந்தார். இதனால் உலக நாடுகளில் சாரணர் இயக்கம் விரைவில் வியாபிப்பதற்குக் காரணமாக அமைந்ததுடன் ஆண், பெண், வயது  வேறுபாடின்றி அனைத்து சமூகத்தினரிடமும் இவ் இயக்கம் பரவக் காரணமாக அமைந்ததெனலாம்.

பேடன் பிரபு அவர்களின் முயற்சியினால் 1910 ஆண்டில்  பெண்கள் சாரணிய வழிகாட்டி ( Girls Guide ) , கடற் சாரணர் பிரிவு ( Sea Scout ) பிரிவும், 1916 இல்  குருளைச் சாரணர்  ( Cubs Scouts  ) பிரிவும், 1918 இல்  திரி சாரணர் ( Rover Scout ) பிரிவும்,  1925 இல் வலது குறைந்தவர்களுக்கான சாரணர் இயக்கமும், 1941 ஆண்டில் வான் வெளிச் சாரணர் ( Air Scout) பிரிவு என அனைத்து மக்களையும் இணைக்க கூடிய இயக்கமாக உருவாக்கியிருந்தார். இதில் பெண்கள் சாரணியத்தை ஆரம்பிக்க பிரபுவின் மனைவியான லேடீ ஒலெவ் பி.பீ அவர்கள் உறுதுணையாக இருந்ததுடன் உலகத் தலைவியாக இருந்து தொண்டாற்றியுள்ளார்.
1920 ஆம் ஆண்டு உலக சாரணர்கள் ஒன்று கூடிய ஜம்போரி ஒலிம்பியாவில் நடைபெற்றது. இவ் விழாவின் இறுதி நாளாகிய ஆகஸ்ட் 6 ஆந் திகதி பேடன் பவல் அவர்கள் “ உலகப் பிரதம சாரணர் ” ஆகப் பிரகடனப்படுத்தப்பட்டார்.
இவ்வியக்கம் உலகமெங்கும் வளர்ச்சி பெறும் எனக் கனவு கூடக் கண்டிருக்காத நிலையில் 1929 ஆம் ஆண்டு காலப்பகுதிகளிலேயே உலகெங்கும் இருபது இலட்சம் சாரணர்களை உருவாக்கியிருந்த பேடன் பவல் அவர்களை திறமையை பாராட்டிக் கௌரவிக்கும் முகமாக 5 ஆம் ஜோர்ஜ் மன்னர் “ கில் வெல் பேடன் பவல் பிரபு” எனும் கௌரவ பட்டத்தை சூட்டி சிறப்பித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது வாழ்நாளின் பெரும் பகுதியை சிறுவர்களின் நலன்களுக்காகவும்,  சாரணியத்தின் வளர்ச்சிக்காக தொண்டாற்றிக் கொண்டிருந்த வேளையில் 80 ஆவது வயதில் தேகநிலை குன்றத் தொடங்கியது. இதனால் தனது இறுதிக் காலங்களைக் கழிப்பதற்காக அவருடைய மனைவியுடன் ஆபிரிக்காவிலுள்ள கென்யா நாட்டில் அவருக்கு மிகவும் பிடித்த இடமாகிய “ நைரோபி ” எனும் பிரதேசத்தில் இருக்கும் தனது இல்லத்தில் வாழ்ந்து வரும் வேளையில் தனது 84 வயதிற்கு ஒரு மாதம் முன்னதாக, அதாவது ஜனவரி 08 ஆந்  திகதி 1941 இல் இவ்வுலக வாழ்வை நீத்தார்.
இவ்வுலகை விட்டுப் பிரிவதற்கு முன்னர் இறுதியாக எழுதிய கடிதம் ஒன்று அவருடைய பத்திரத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டது.  அதில் அவர் “போதுமென்ற மனமே பொன் செய் மருந்தாக இருக்க வேண்டும். கிடைத்தன கொண்டு தகுந்தன ஆற்றுக. உலக செயல்களின் இருளகத்தைவிட்டு ஒளியகத்தை நாடுக. உலகத்திலுள்ள மற்ற மக்களுக்கு சந்தோஷத்தைக் கொடுப்பதன் மூலமே உண்மையான இன்பத்தைப் பெற முடியும்” என்ற வரிகளை உலகில் உள்ள சாரணர்களுக்கு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் வாழ்ந்து சேவையாற்றியவர்களை நாம் என்றுமே மறந்துவிட முடியாது. அப்படியானவர்களுக்கு என்றுமே மரணம் தழுவியதில்லை. அவருடைய எதிர்பார்ப்பும் நம்பிக்கை எதுவும் வீண் போகவில்லை. இன்றும் அவர்கள் இளஞ் சாரணனாக அனைத்துலக நாடுகளிலும் உலா வந்து கொண்டிருக்கிறார் என்பது மிகைப்படுத்தப்படாத உண்மையே.